மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் : மகிழ்ச்சி தானே வாழ்க்கையின் குறிக்கோள்?! அப்படியெனில், அதற்கு உடற்பயிற்சியும் உதவும். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவு, உடற்பயிற்சி செய்வதால், அமைதியான மனநிலையை உருவாக்கும் நியூரோ டிரான்ஸ்மீட்டர் ரசாயனங்களை உற்பத்தி செய்யும் நியூரான் செல்கள் புதிதாக உருவாவதாக சொல்கிறது. உடற்பயிற்சிகளின் போது, மூளை உற்பத்தி செய்யும் நரம்புகளை தூண்டும் சில ரசாயனங்கள், வலி மற்றும் மனச்சோர்வு உணர்வை தற்காலிகமாக நிறுத்துவதும் தெரிய வந்துள்ளது. மேலும், செரடோனின், டோபாமைன், நார் எபினெப்ரின் போன்ற மன அழுத்தத்தை குறைத்து சாந்தமான மனநிலையையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கும் ஹார்மோன்கள் சுரப்பையும் உடற்பயிற்சி ஊக்கப்படுத்துகிறது. இந்த ரசாயனங்கள், நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கின்றன.
உடல் எடையை குறைக்கவும் பராமரிக்கவும் உதவும் : தற்காலத்தில், உடலுழைப்புக் குறைவாக இருப்பதே உடற்பருமன் அதிகரிப்பதற்கும், எடை கூடுவதற்கும் காரணமாக இருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட கால இடைவெளியில் உடற்பயிற்சிகள் செய்வது, உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தை அதிகரிக்கிறது. இதனால் நாம் உட்கொள்ளும் அதிகப்படியான கலோரி எரிக்கப்பட்டு விடுவது மட்டுமல்லாமல், உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பும் குறைகிறது. இதனால் இயற்கையாகவே உடல் எடை குறைகிறது.
உறுதியான எலும்புகள், வலுவான தசைகள் : உறுதியான தசைகள் மற்றும் எலும்புகளை பராமரிப்பதில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் போர் வீரர்களும், விளையாட்டு வீரர்களும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது அந்தக் காலத்தில் இருந்தே தொடரும் பழக்கமாக இருக்கிறது. இதைத்தான் இன்றைய அறிவியல் ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. உணவில் போதுமான அளவு புரதச் சத்து உட்கொண்டு, எடை தூக்குதல் போன்ற பயிற்சிகள் மேற்கொண்டால், தசை வளர்ச்சியும், வலுவடைதலும் அதிகரிக்கும். ஏனெனில் உடற்பயிற்சி செய்யும்போதும் சுரக்கப்படும் சில ஹார்மோன்கள், உடல் தசைகள் அமினோ அமிலங்கள் சுரப்பதை ஊக்குவிக்கின்றன. இது தசைகளின் வளர்ச்சியை ஊக்கிவித்து, அவை சேதமடைவதை குறைக்கின்றன. எலும்புகள் வலுவிழக்கும் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
உங்கள் ஆற்றலை அதிகரிக்கும் : உடற்பயிற்சிகள் செய்யும்போது உடலின் ஒட்டுமொத்த செல்களும் சுறுசுறுப்படைகின்றன. உடலின் சக்தியோட்டமும், கழிவுநீக்கச் செயல்பாடுகளும் அதிகரிக்கிறது. செல்களின் செயல்திறன் அதிகரிக்கிறது. இதன் விளைவாக, உடனடியான புத்தணர்வும், ஆற்றலும் கிடைக்கிறது. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் மற்றும் நோய் பாதிப்புகள் கொண்டோருக்கும் ஆற்றல் ஊக்கியாக உடற்பயிற்சி உதவும். இதுமட்டுமின்றி, நாட்பட்ட சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடற்பயிற்சியைவிட சிறந்த தீர்வு கிடையாது என்கின்றனர் மருத்துவர்கள். புற்றுநோய், எயிட்ஸ், மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ் போன்ற கொடிய நோய் பாதிப்புகள் கொண்டவர்களுக்கு கூட, உடற்பயிற்சி உதவுகிறது.
நாள்பட்ட நோய்களின் பாதிப்பு குறையும் : நோயுற்று இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று பொதுவாக ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆனால், அது முழு உண்மையல்ல. ஏனெனில், பல நாட்பட்ட நோய்கள் வருவதற்கு முதன்மை காரணமாக இருப்பதே குறைவான உடலுழைப்பு அல்லது போதுமான உடற்பயிற்சி இல்லாததுதான். புற்றுநோய், மூட்டுவலி, மனச்சோர்வு, பதற்றம் இப்படி பல நாட்பட்ட நோய் பாதிப்புகளை குறைப்பதற்கு உடற்பயிற்சி உதவுவதை, தொடர்ச்சியான ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
சருமப் பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும் : உடற்பயிற்சி, சருமத்துக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால், சருமத்துக்கு அதிக அளவு ஆக்சிஜனும், ஊட்டச்சத்துகளும் கிடைக்கிறது. இது சருமத்தில் ஏற்படும் சேதங்களை உடனடியாக சரிசெய்துகொள்ள உதவுவதுடன், ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது : உடற்பயிற்சியினால், மூளைக்கு செல்லும் ரத்தவோட்டத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் மூளைக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கிறது. மேலும், உடற்பயிற்சியினால் தூண்டப்படும் ஹார்மோன் சுரப்புகள் மூளைச் செல்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. வயதான காலத்தில் நினைவாற்றலையும். மனதின் செயல்திறனையும் அதிகரிக்கிறது. மேலும், முதுமையில் அதிகம் தாக்கும் அல்சீமர் மற்றும் மனச்சிதைவு நோய்ப் பாதிப்புகளையும் உடற்பயிற்சி குறைக்கிறது. உடலுழைப்பு இல்லாத மந்தமான நிலையில் இருப்பவர்களைவிட, உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறவர்களின் உடல் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் முதுமைக் காலத்தில் சிறப்பாக இருக்கிறது.
ஆழ்ந்த தூக்கத்தை அளிக்கும் : உடற்பயிற்சியினால் உடல் ஆற்றலை செலவிடுகிறது. சோர்வடைந்த உடல் விரைவாக ஓய்வை நாடுகிறது. இதனால் தூக்கம் தூண்டப்படுகிறது. தூக்கத்தின் போது உடல் சுத்திகரிப்பு வேலையைச் செய்கிறது. இதனால் அடுத்த நாள் உற்சாகத்துடன் எழ முடிகிறது. அதனால் தான், தூக்கமின்மைக் குறைப்பாடு உள்ளவர்களுக்கும் உடற்பயிற்சியையே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பொதுவாக ஆழ்ந்த தூக்கமே எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.
வலிகளை குறைக்கும் : நாட்பட்ட வலி என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கும். ஆனால், உடற்பயிற்சியானது அந்த வலியை குறைக்கும். நாட்பட்ட அடிமுதுகு வலி, தோள்பட்டை வலி, முதுகு மற்றும் கழுத்து வலி உள்ளிட்டவை உடற்பயிற்சியினால் குறைவது அல்லது குணமாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் வலியை தாங்கும் திறன் அதிகரிப்பதும் தெரிய வந்துள்ளது.
செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்துகிறது : உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால், அது ஆண்கள், பெண்கள் இருபாலரிடமும் உடலுறவு செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், ஆர்வத்தையும் அதிகரிக்கிறது. தாம்பத்ய உறவில் நாட்டத்தை ஏற்படுத்துவதில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
முதுமையை தாமதப்படுத்துகிறது : உடற்பயிற்சிகள் செய்வது உங்களை பல வழிகளிலும் இளமையாக உணரச் செய்கிறது. நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் உடல் ஒத்துழைக்கும்; நல்ல தூக்கம் உண்டாவதுடன் நாட்பட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பும் குறையும். உடல் செல்களிலுள்ள மைட்டோகாண்ட்ரியா செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், முதுமையடைதலை தாமதப்படுத்துகிறது.
நன்றி-news18
Tags:
உடல் நலம்
